Sunday, May 3, 2020

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (201)

பாடல்:
*******

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!
.
                - கபிலர்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* தபங்கர் என்னும் முனிவர் தவம் செய்கையில் பாயவந்த புலியை ஹொய்சள என்று கூறிய முனிவர் ஆணைப்படிக் கொன்ற அரசன் புலிகடிமால் என்று பெயர் பெற்றான் என்று ஒரு கதை.

* சசகபுரம் என்னும் காட்டில் தன் குலதெய்வத் தேவியை வழிபடச் சென்றவனை புலி தாக்க வருகையில் அங்கிருந்த பெரியவர் ஒருவர் ஒரு தடியைத் தூக்கிப்போட்டு ‘ஹொய்சள’ என்று கூற அத் தடி கொண்டு புலியைக் கொன்றவன் புலிகடிமால் எனப்பட்டான் என்பது மற்றொரு கதை.

* புலியின் அட்டகாசத்தைப் போக்கி மக்களைக் காப்பாற்றியவன். இது இவன் ஆற்றிய ஆண்மகனின் கடமை.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் கபிலர். பாடல் எண் 201. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

1 comment:

  1. எப்பிணி எவ்வழி வறின் அப்பிணி
    அழித்தல் அரசர்க் கடன்.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete