Monday, May 11, 2020

தமிழ் காட்டும் நெறி

தமிழ் காட்டும் நெறி

புறநானூறு (205)

பாடல்:
*******

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே

                - பெருந்தலைச் சாத்தனார்

திணை: பாடாண் திணை

துறை: பரிசில் கடா நிலை துறை

பாடல் கூறும் நெறி:
*********************

* முதிர்ந்த செல்வம் பெற்ற மூவேந்தர் ஆயினும் அன்பில்லாமல் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்.

* செறுக்கொண்டு தாக்கிய வாள்-வீரர்களின் செருக்கை அழித்த வெற்றியால் சினம் தணந்த குதிரைப்படை மறவர்களைக் கொண்ட மன்னனே!

* முல்லை வேட்டைநாயையும், வலிமை மிக்க வில்லையும் கொண்ட வேட்டுவ! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக.

* கதநாய் – மோப்பத்தால் மூக்கு கதகதக்கும் வேட்டைநாய். அது மான் கூட்டங்களை வளைத்துப் பிடித்துத் தரும் வேட்டைநாய்.

* மேகம் கடல் வளத்தை அள்ளிக்கொள்ளாமல் திரும்பாதது போல, யானைப் பரிசில் பெறாமல் பரிசிலர் சுற்றம் மீள்வதில்லை என்பதை உணர்ந்துகொள்.

பாடல் குறிப்பு:
***************

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு (எட்டுத்தொகை). இப்பாடலை இயற்றியவர் பெருந்தலைச் சாத்தனார். பாடல் எண் 205. இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் புறப்பொருள் சார்ந்தவையாகும்.


தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகளைப் பின்பற்றுவோம். தமிழிற்கு மேலும் அழகு சேர்ப்போம்!

வளர்க தமிழ்!      வாழ்க தமிழ்!

2 comments:

  1. அன்பொட ழைத்து வெண்மு த்தாயினும்
    இன்முகத் தாலே வழங்கு.
    வடலூர்ஜெகன்

    ReplyDelete
  2. காலத்தை விரயம் செய்து விட்ட என் போன்றோர்க்கு கல்வியும் களிப்பும்
    தரும் தமிழ் நெறி..🙏

    ReplyDelete